Sunday, December 20, 2009

பயணங்கள் தொடரும்…

அன்றொரு நாள் அந்திவான இன்பொழுதில்

அரவமே இல்லாத சில் குளிரில்

ரயிலுக்காய் காத்திருந்தேன்; விழிகள் சேர்த்து

ரண தூரம் கடந்துவந்து ஏறிடவே

பக்கத்து சீட்டில் பஞ்சாமிர்தம்; என்னை

பார்த்து சிலிர்த்தது புன்னகையில்


யாப்பு இலக்கணம் உடைத்தெறிந்தேன்; கவிதை

சாக்கில் எதுகை மோனை எதற்கென்று

மோனை எதுகை திரிந்திடவே; சாட்டில்

பானையை திறந்து பழரசம் பருக

தளை சீர் நினைத்து தடுமாறினேன்

தவணைகள் கேட்டு கவிதை உரையாடினேன்


உம்…மென்றாள்; தாமதம் எதற்கென்றாள்

‘கம்’… என்றேன் தருகிறேன் இப்பவென்றாள்

கொடுக்க நினைத்து; கடுக்க வாங்கினேன்

சிடுக்க அவள் குழந்தையை; அடுத்த

பக்கத்தில் அவள் புருஷன் - சிரிக்க

பத்திரமாய் பாருங்கோ என்குழந்தை யென்றாள்.

Thursday, December 17, 2009

சீர்வரிசை...

புன்னை மர நிழலே!
பூக்களின் இளந் தளிரே!
தன்னந் தனி மையிலே
தாமரைப் பூச் சோலையிலே

அள்ளி யுனை யெடுத்து
அர வணைத்து முத்தமிட
உனை யின்று எனக்களித்த
உங்கப்பன் என் மாமன்
செய்த தவம் என்னவென்று
செப்பு புள்ள வாய்திறந்து

பஞ்சனையில் நான மர்ந்து
பாடிவார மூன்றாம் பால்
மஞ்ச லிலே நீராடி
மரகத மாய் வந்தவளே!

புன்னகையை சீதன மாய்
பூண்டு இங்கு வந்தவளே!
பொன் நகையை வீசியெறி –அது
பெறுமோ உன் சுள்ளிடையில்.

மாட்டுக்கு சீதன மாய்
மணியொன்று கட்டுபவர் - என்
பாட்டுக்கு சீதன மாய்
பாரதியை தருவாரே?

சீதனமும் நான் பெற்ற
சிந்தனையும் உன் அறிவும்
போதுமடி எனக் கிந்த
பொன்னான சீர் வரிசை!

Wednesday, December 16, 2009

விழித்திடு மனிதா!

ஆறறிவு மனித உனக்கு
பேரறிவா!
ஓரறிவு கூட இல்லை – வெறும்
சேறறிவு!

காட்டில் என்ன தேடுகிறாய் மனித
பாட்டையா – அதை
நோட்டில் தேடு
வீட்டில் தேடினால்
விரைவில் கிடைக்கும்
உனக்கு பைத்திய ‘வார்ட்டு’!

விட்டிலைப் பார் - அது
குதிக்கிறது மகிழ்ந்து
விளக்கு எண்ணெயில்,
உயிர் போகுமன அறியாமல்….

மனிதா!
பட்டாம் பூச்சியாயிரு
சிட்டாக
தட்டாத உயரத்தில் - சந்தோஷ
சரித்திரம் எழுதி
தன்வாழ்வு எட்டு நாளென அறியாமல் ….

ஈசல் பாடுகிறது சிந்து
பூசலோடு வெளிச்சத்தில்
ஒரு நாள் கழியுமுன்னர்.
அது அறிந்திருக்கவில்லை
தன் வாழ்வு இருபத்தி நான்கு
மணிகள் என்று…..


அதுதான் சொல்கிறேன்
விளித்திடு மனிதா!
இன்று முதல் பணியிருக்கு…

Monday, December 14, 2009

தமிழ்

அல்லித் தாமரையாய்
அழகான தேனிலாவாய்
உள்ளத்தில் நீயிருக்க
ஊணுறக்கம் தோணலையே!

பள்ளிப் பருவத்தில்
பாவையுன் யுவருவத்தில்
துள்ளிக் குதித்ததுவும்...
தூங்காமல் விழித்ததுவும்...

கன்னி நீசெய்ய
காதலினை நினைத்துவிடில்
நெஞ்சம் நொகிழுதடி
நொருங்காமல் வெடிக்குதடி!

பல்லாண்டு யான்செய்ய
பாவிக் காதல்தனை
பொல்லாத எதிரியவன்
‘பொம்பர்’தனில் தான்வந்து
சில்லாட வைத்துவிட்டான்
தள்ளாடும் வாழ்வுதனை.

என்நாளும் யெனையாளும்
என்னுயிரே தமிழ்தாயே!
பந்தாடி யெதிரிகளை
பாடையிலே அனுப்பிவிட
படையெடுத்து வருகின்றேன்....!

லண்டன் காசு!


வாடிய மல்லிகை மலரிதழ் போல

ஆடியே அன்னார் வாழ்வும் கழிந்தது

தேடிய சொந்த பந்தங்கள் ளெல்லாம்

ஓடியே நின்று வேடிக்கை பார்க்குது!


தாலியே கட்டி யாணைதிட்ட தாரமும்

தவறாக எண்ணியே தொலைந் தோடிப்போனது

தவம்பல செய்து பெற்றவை லண்டன்போய்

தவறாது காசினை தரமாக அனுப்புது.



நாதியற்று நனாதையாய் கிடக்குது பிணமிங்கு

போடடா போடு கொள்ளியை போடு!

ஊரா, உறவா, அண்ணா, தம்பியா?

போட்டால் கிடைக்குது லண்டன் காசு!!

Sunday, December 6, 2009

ஐந்தாவது ஆண்டில் ….!



வானம்விழ, இடிமுழங்க தானை கொண்டு
வாரிஎழும் கடலலைகள் கூத்திட் டாட
கானமிடம் மயிலினங்கள் கரைந்து ஓட
கங்கையிலே செங்கைமலர் உயிர் திறக்க
விண்டிலர்கள் சண்டியர்கள் வெகுண் டொளிக்க
விட்டிலானோம், விட்டையானோம், அன்று நாட்டில்
சுனாமி அரக்கன் சுமந்து வந்தான் வையநீரை
சூனியமாக, உயிர்கள் என்னவென்பேன் ஐயய்யோ!


வடக்கென்று கிழக்கென்று பார்த்திடா மல்
வஞ்சனைகள் தீர்த்தவுந்தன் திறந்தான் னென்ன
அடுக்களையில் சமயலுடன் அள்ளிச் சென்றாய்
ஆருயிர்கள் உன்கிழைத்த அநீதி யென்ன
இடுக்கண்நீ செய்தவைகள் ஐந்து ஆண்டில்
இறுக்கிறது, புடைக்கிறது, நனைக்கிறது – என்
நெஞ்சத்தை துளைக்கிறது என்ன செய்வேன்
கொஞ்சத்தை நீ விடவுமில்லை ஐயய்யோ!

Thursday, December 3, 2009

யுத்தங்கள் ஓய்வதில்லை!

கல்லறைகள் மீது வேதங்கள் ஓதப்பட்டன

அன்று ...


இன்று ....

கல்லறைகளே வேதங்கள் ஆகிவிட்டன

பிணங்களின் வருகையின்றி...!


ஆனால், நடக்கிறது கல்லறை யுத்தம்

முதலில் செத்தவன் யார் என்று ......!

Wednesday, October 14, 2009

குளிர் காய்கிறது தமிழகம்............?

தமிழக நாடாளுமன்றக் குழுவினரின் இலங்கை வருகை ஈழத்தமிழர்களின் வயிற்றில் பாலை வார்ப்பதற்கு பதிலாக புளியை கரைத்து வார்த்துள்ளதாக தகவல்.

கடந்த 10 ஆம் திகதி ஆரவாரம் இல்லாமல் இலங்கையில் காலடி பதித்த தமிழக நாடாளுமன்ற குழுவினரின் வருகையை அறிந்த இலங்கைத் தமிழினம் - அதிலும் வடபகுதி மக்கள் (இடம்பெயர்ந்து முகாங்களிலுள்ள மக்களும் கூட) தங்களுக்கு சாபவிமோசனம் அல்லது மறுவாழ்வு கிடைக்கப் போவதான சந்தோசத்தில் இருந்ததாக தெரிவிக்கிப்படுகிறது.

தமிழக நாடாளுமன்ற குழுவினர் இலங்கை வந்த அன்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் ஒன்றரை மணித்தியால கலந்துரையாடல் ஒன்றை நடத்திவிட்டு – நலம் விசாரித்துவிட்டு – இடம்பெயர்ந்துள்ள மக்களின் குறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு முன்பாக - ‘டாட்டா’ காட்டி விட்டு -கலந்துரையாடலை முடித்துக்கொண்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் தெரிவிக்கப்படுகிறது.

மறுநாள் அந்த குழுவினரின் வடபகுதிக்கான பயணம் ஆரம்பமாகியிருந்தது. அமைச்சர்களான ஆறுமுகம் தொண்டமான் மற்றும் டக்லஸ் தேவானந்தா ஆகியோருடன் அவர்கள் யாழ் சென்றிருந்தனர்.

கடந்த 11 ஆம் திகதி காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் சென்றடைந்திருந்த குழுவினர், யாழ். பொது நூலகத்தில் பொதுமக்களுடனான சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்ததுடன், யாழ் பல்கலைக்கழகம் மற்றும் வேலணையில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களையும் நண்பகல் 12 மணிக்குள் - இரு மணியத்தியாலயங்களுள் அனைத்தையும் முடித்துக்கொண்டு நோயாளிகளை பார்க்கச் செல்வதாக கூறிக்கொண்டு வவுனியா – மெனிக்பாம் முகாம் நோக்கி ஹெலிகொப்டரில் புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

இதைத்தான் பின்னர் மலையக விஜயத்தின்போது D.R.பாலுவிடம் ஊடகவியலாளர் ஒருவர் “ நோயாளிகளை பார்க்க என இலங்கை வந்த நீங்கள் வடபகுதியில் இருக்காமல் நுவரெலியாவுக்கு சுற்றுலாவா வந்தீர்கள்” என கேட்டிருந்தார் ஆக்கும்.

அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும் நாம் மீண்டும் சம்பவத்திற்குவருவோம். வவுனியா – மெனிக்பாம் முகாமிற்கு அங்குள்ள மக்களை பார்க்கச் சென்ற விடயம் முகாமிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு இன்றுவரை தெரியாதாம். ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தது கண்டுதான் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்துள்ளது என புரிந்துகொண்டுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த முகாமிற்கான சிறிய சுற்றுலாவிற்கு நாடாளுமன்றக் குழுவினர் செலவிட்ட காலம் அதிகமல்ல, வெறும் ஒரு சில மணித்தியாலங்கள் தான் என ஊடக வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

முகாம் சுற்றுலாவினை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய தமிழகக் குழுவினருக்கு 11 ஆம் திகதி அன்றிரவு மிகப்பெரிய விருந்துபசாரம் வழங்கப்பட்டதாகவும் தகவல்.
அன்றைய தின இரவையும் கொழும்பில் கழித்த குழுவினர், மறுநாள்; இரவு அதாவது 12 ஆம் திகதி ‘எழில் கொஞ்சும் பொழில் நாடாம்’ மலையகத்திற்கு அமைச்சர் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழுவினருடன் சென்றிருந்தனர்.


மலையகத்தில் மட்டும் அந்த குழுவினர் தங்களது விஜயத்தின் பெரும் பகுதியை – ஒன்றரை நாட்களை – 36 மணித்தியலாங்களை கழித்திருந்தனர்.

அந்த தருணத்தில் ஏதாவது துருப்புக் கிடைக்காதா என எண்ணி பல தடவைகள் தெலைபேசி இலக்கங்களை அழுத்திய எனக்கு கிடைத்தது கைவலி மட்டுமே. ஆனால், ஒரு பதில் மட்டும் தொடர்ச்சியாக கிடைத்தது “அவர்கள் பார்ட்டியில் இருக்கிறார்கள்”........ என்பதுதான் அது....

இதனை தொடர்ந்து 14 ஆம் திகதி பிற்பகலில் குழுவினர் இந்தியா திரும்பும் வரையிலான காலப்பகுதியல் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தனர். ஆனால் கதைக்கப்பட்ட – பேசப்பட்ட – தீர்மானிக்கப்பட்ட - எந்த ஒரு விடயங்களையும் இந்தியக் குழுவினரோ சம்பந்தப்பட்ட தரப்பினர்களோ ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.

ஆனால், ஒன்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை நாங்கள் பல தடவைகள் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, தாயகம் திரும்பியதும் ஊடகங்களுக்கு இடம்பெற்ற சந்திப்புக்கள் தொடர்பாக தெளிவு படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார். இருந்தும் தமிழகக் குழுவினர் இலங்கைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பாக பல்வேறு நிபந்தனைகளுடனே அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக ஊடகங்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது. பொறுத்திருந்து தான் பார்ப்போம் - இன்றைய தினத்தின் பின்னர் ஏதாவது மாற்றங்கள் நிகழ்கின்றனவா என்று.......

Tuesday, August 18, 2009

அகதி முகாமில்…...


ஆடைக்குள் உடல் மறைத்து
பாவாடைக்குள் இடை குளித்து
சாடைக்கு குடை பிடித்தாயன்று.

வாடைக்கு இடையுமில்லை -பெண்
யாடைக்கு நடையுமில்லை – சா
வாடைக்கு தடையுமில்லை இன்று.

பாடைக்கு சொல்லிவிடு - முகாமில்
பீடைக்கு மழை வருது - –உயிர்
தாடைக்கு மேல்வருது என்று...

Friday, August 14, 2009

மாற்றி விடு

வேசத்தை மாற்றி விடு – கடும்
மோசத்தை தாழ்த்தி விடு
தேசத்தை வென்றிடவே – உந்தன்
நேசத்தை பாய்ச்சி விடு.

சிந்தித்துச் செயலாற்று – சில
சிந்தனை களை வீசு
தூசித்து நீ திரியும் - அந்த
செயல்களை மாற்றிடு.

வாசித்து நீ நடந்தால் - உலகம்
பூசித்து வாழ்த்துமடா
யாசித் திருக்கையிலே –உந்தன்
யோசனை தீருமடா.

தந்தந்தை நீக்கிவிடு – பாச
பந்தத்தை போக்கிவிடு
சொந்தத்தை யுருவாக்கு – நாட்டில்
சுதந்திரம் தனை மூட்டு.

மண்ணுக்கியாகு முடலை - இனிய
பண்ணுக்கு உரமாக்கு
எண்ணை என்னுகையில் - நல்
எண்ணையாய் ஆகிவிடு.

Wednesday, August 12, 2009

மானம் இல்லை போடா!

நாட்டில் சண்டை போச்சு - இப்ப
காட்டில் சண்டை யாச்சு
பாட்டில் சண்டை யெல்லாம் - இப்போ
மாட்டுச் சண்டை யாச்சு!

வீட்டில் சண்டை யில்லை - இங்கு
வீரர் சண்டை யில்லை
போட்டிச் சண்டை யுண்டு – உன்னை
போடும் சண்டை யுண்டு!

ரோட்டுச் சண்டை யுண்டு - இப்போ
ரொக்கச் சண்டை உண்டு
ரோந்து போகும் உன்னை - இப்போ
மாய்ந்து போக்கும் சண்டை!

நீதி சொல்ல வந்தார் - வெள்ளை
நித்தி யங்கள் பெற்றார்
நீந்தக் கற்றுக் கொடுத்தால் - நீயோ
மாளக் கற்கி றாயே!

காட்டிக் கொடுத்தும் வாழ்வாய் - உன்னை
கூட்டிக் கொடுத்தும் வாழ்வாய்
மாட்டிக் கொடுக்க வென்றால் - உன்னை
காட்ட யாரு முண்டோ!

கப்ப லேறி னாயே – அன்று
கடலைத் தாண்டி னாயே
கப்பம் பெற்று நாட்டை – என்றும்
குற்ற மற்று ஆண்டாய்!

தானை வளர்க் கிறாயா -இன்று
பூனை வளர்க் கிறாயா – கவரி
மானை வளர் திட்டாலும் - உனக்கு
மானம் இல்லை போடா!

Tuesday, August 11, 2009

சுனாமி எச்சரிக்கை!

இந்து சமுத்திரத்தில் அந்தமான் தீவுக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதியை அண்டி கடற்பரப்பில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தினால் இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்த சமுத்திரத்தின் அந்தமான் தீவுக்கு அருகில் இன்று அதிகாலை (11.08.2009) 1.25 அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டிருந்ததாக இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அறிவித்திருந்தன.

இதையடுத்து சுனாமி எச்சரிக்கை ஒன்றினையும் அந்த நாடுகள் விடுத்திருந்தன. (குறிப்பாக இந்தியா மற்றும் பங்களாதேஷ்) இதனை தொடந்து இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி எச்சரிக்கை மையம் ‘சம்பிரதாய ரீதியாக’ தனது பங்கிற்கு பணியினை செய்திருந்து; ஆனால் சற்று தாமதித்து!

இலங்கையின் முதலாவது எச்சரிக்கை இன்று அதிகாலை 2 மணியளவில் விடுக்கப்பட்டது. அது எச்சரிக்கையாக அல்ல தகவலாக ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எமது ஊடகமும் அடங்கலாக.

இதனை தொடர்ந்து ‘தடல் புடலாக’ இரண்டாவது எச்சரிக்கை விடுக்கப்பட்டது அதிகாலை 2.35 அளவில்! அதில் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கையுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது இந்து சமுத்திர பிரந்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்து 1 மணித்தியாலம் 10 நிமிடங்கள் பின்னர்!

ஆனால் இலங்கை வளி மண்டலவியல் திணைக்களத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படும்போது இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் தமது சுனாமி எச்சரிக்கையினை வாபஸ் பெற்றிருந்தமைதான் வேடிக்கை!
அதன் பின்னர் நாம் வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி எச்சரிக்கை நிலையத்தினை தொடர்பு கொண்டபோது அதற்கு ‘சலாப்பல்களான’ பதில்கள் கிடைத்தன.

இதன் மூலமாக ஒன்றனை நாம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. இலங்கை சுனாமி எச்சரிக்கை மையம் சுயமாக செயற்றடவில்லையென்பதனையும் தொழில் நுட்பம் மற்றும் முன்கூட்டிய அறிவித்தலை விடுக்கும் திறன் இலங்கை வளிமண்டலயவில் திணைக்களத்திடம் இல்லை என்பதனையும்! உயிர்களின் போராட்டமான இந்த எச்சரிக்கை தொடர்பில் இந்த மையம் போதிய கவனம் எடுத்ததாக தெரிவியவில்லை. ‘இன்னொரு சுனாமி வரட்டும் மனித உயிர்களை காவு கொள்ளட்டும்’ அப்போதாவது புரிகிறதா பார்போம் உயிர்களின் விலைகள் மலிவு அல்ல என்று!

Tuesday, May 26, 2009

கொட்டியது மனித ரத்தம்!

கொட்டியது கொடிய யுத்தம் - தினம்
சொட்டியது மனித ரத்தம்
தட்டினான் உயிர்களை நித்தம் - யமன்
சூட்டினான் தினம் 'ஹெலி' முத்தம்.

நடந்தது தினமும் இறப்பு – அந்த
உயிர்களுக்கு ஏது மறு பிறப்பு
தளிர்க்கிறது தன்மான விருப்பு – தினமும்
துளிர்க்கிறது மரணங்களில் தளிப்பு.

கொடுத்திட்டான் ஆயுதம் வல்லரசன் - அதை
தடுத்திட யாருமில்லை மல்அரசன்
எடுத்திட்டான் உயிர்களை கல்அரசன் - இதை
தடுத்திட தருணம் வரவில்லை 'ஐ.நா.' வரசன்.