Tuesday, March 23, 2010

தலைப்பு தடம் புரண்ட மடல்

பருக வருவோர்க்கு
பஞ்சமின்றி –
பாதீடு கொடுத்தவள் நீ...

கலவியில் கள்வரையும்
உயிர் பிரிதல் -
வெல்வோரையும்
உறங்க வைத்தவள் நான்...

ஊரார் உன்னை உரசியபோதும்
உலுக்கியுனை எடுத்தபோதும்
‘போ’ என்று சொல்லாமல்
பொறுப்பாய் நின்றவள் நீ...

எனக்கோ –
சாய்ந்து படுக்கவும் முடியலை
பாய்ந்து அதை -
தடுக்கவும் முடியலை

இருந்தும் -
தேய்மானம் இன்றி
தேய்ந்து கொடுத்தோம்
வருமானம் இன்றி
வாடகைக்கு விடப்பட்டோம்...

இப்போ –
சுருட்டி எனை எடுத்து
சுடுகாட்டில் போட்டுவிட்டான்
சுனை கெட்ட என் சீமான்

அதனால்,
நடுத்தெருவில் நாயாய்
நனைந்து கொண்டிருக்கின்றேன்.

தங்கையே-
போதும் உன்
பொதுப் பணி
அக்கா நான் சொல்கிறேன் கேள்...

அன்புள்ள
‘ஆவுரேஞ்சு கல்’லுக்கு
அக்கா ‘பாய்’ எழுதும்
பரிதாப மடல்.

Wednesday, March 17, 2010

உன்னோடு வாழ்கிறேன்

அகராதியே!
உனை நான் அறிந்திராவிட்டால்
உலக இலக்கண வழக்கு
எனக்கு பிணக்கு ஆகியிருக்கும்.

கவிதையே!
உனை எழுதுவதற்கு
சரணங்கள் -
சதி செய்திருக்கும்
பல்லவிகள் -
பகிடிவதையில் புகுந்திருக்கும்
முற்றத்து முல்லையும்
முழுகாமல் இருந்திருக்கும்.

அறிவகமே!
உன் மூச்சுக் காற்று
என்னோடு முக்குளிக்கும்போது
நான் தத்தளிக்கிறேன்.

களஞ்சியமே!
நிறையவே உன்னை வாசிக்கிறேன்
உயிரளவும் நேசிக்கிறேன்.

ஒற்றையாய் என் ஆன்மா
பற்றையாய் உன்னை நேசிப்பதால்
கைக்கிளையில் -
கவிதை செய்கிறேன்
கானல் நீரில்
தெப்பம் விடுகிறேன்.

சிருஷ்டியின் முதற்பொருளே
அதன் கருவும், உரியும்
நீயாகும்போது
தலையங்கம் மட்டும் என்ன
தலை தட்டுமா?

ஓ... கவிஞர்களே!
உங்கள் படைப்புக்களை
படிக்கும் போது
நான் நினைக்கவில்லை
நானும் நீங்கள் தான் என்று..

என்னுள் உறைந்த
உதிரத்துளியே
இறுதியாக ஒன்று
உன்னிடம் கேட்கிறேன்...

என் உயிர் மூச்சு என்னை
முட்டும்போதும் -
பயிர் காச்சு விதை
கொட்டும்போதும் -
பக்கத்தில் நீயிருந்து
பால் பழம் பருக்க வேண்டும்
பாவி உயிர் அப்போ
பாரை விட்டு பிரிய வேண்டும்
செய்வாயா...?

Friday, March 5, 2010

ஏன்டிபுள்ள பொங்கவைச்சே..

தெற்குத்தென் தெருவோரம்
தேங்காய்கள் விக்கேக்க
பாக்கிலே சுண்ணாம்பு
பக்குவமா சொதப்பேக்க
நாக்கிலே சிவப்பதுபோல்
நனயவந்து நின்றவளே
பருவமும் அறியாம
ஏன்டீபுள்ள பொங்கவைச்சே...

எழவுவிழுந் தவீட்டில்
சலவைக்கே சுரண்டேக்கை
செலவுக்கு என்னபண்ண
உணவுக்கே உதைக்கிறது
களவுக்கு போய்வரவா?
கழுத்திலே சுருக்கிடவா?
எழவுக்குப் பிறந்தவளே
ஏன்டீபுள்ள பொங்கவைச்சா

அப்பனாத்தா இருந்திருந்தா
ஆளுக்கொரு தேருகட்டி
ஆரவாரம் செய்திருப்பா
ஆலத்தி எடுத்திருப்பா
பொங்கல்வைக்க போறனெண்டு
பொருட்டும் சொல்லாமல்
புறத்தாலே போகேக்க
ஏன்டீபுள்ள பொங்கவைச்சே...

பத்துவய சிற்கேபுள்ள
பன்னிரண்டு நாளிருக்க
என்னபுள்ள பண்ணிவைச்சே
என்னத்திற்கு கொள்ளிவைச்சா
பொங்கவைக் கப்போறனெண்டு
சொல்லிவைக்க கூடவில்லை
இந்தச்சீக் கிரத்தில்
ஏன்டீபுள்ள பொங்கவைச்சே...

குந்திமக பேழையிலே
முந்தியனுப் பிவைச்சா- இது
பிந்திடிச்சே என்னசெய்ய
பிறப்பொண்டு ஒட்டிச்சே
அந்திகரு கையிலே
ஆருக்கும் தெரியாம
சீக்கிரம அனுப்பி வைச்ச
சிவனேண்டு போயிடுவா

அன்புள்ள எதிரிக்கு...

யன்னலோர மின்னலாய்
பின்னலோடு வந்தவளே
அந்தியிலே சந்திரன்போல்
சந்தியிலே மறைந்தவளே
வம்பான எதிரியென
பண்பாக பெயரெடுத்த
தெம்பான எதிரிக்கு - எனது
அன்பான வணக்கங்கள்

பருதியின் பாகத்தில்
பாற்கடலின் வேகத்தில்
கரைபுரண்டு வந்தவளே
நுரைபுரண்டு போனவளே
பாதிலிலே போனாலும் - நான்
பதைபதைத்து நின்றாலும்
பண்பான எதிரிக்கு
பல்லாண்டு வணக்கங்கள்

கவியேதா கமென்றாய்
கலங்கரையே விளக்கென்றாய்
புவியேமா றுமென்றாய்
பெருக்கெடுத்துப் போகுமென்றாய்
திதியே மாறினும் - என்
மதியென்றும் மாறாதென்றாய்
அடியேய்நான் நினைக்கலையே –உன்
இடிமனசு மாறுமெண்டு

இராப்பூமல ரும்போது
விறைப்பு இருக்குமென
சிறப்பாய் கொணரந்தேன்
மரப்பாய் உனக்கெண்டு
மறுப்பாய் நீசொன்னாய்
தரைப்பாய் போதுமென – நான்
வெறுப்பாய்நினைத் ததில்லை –வாழ்வு
கறுப்பாய்போ குமெண்டு....

Wednesday, February 17, 2010

அம்மா நினைவிருக்கோ...

தொந்தி தொகை வளர்த்து
தொப்பையை மறைத்துக் கட்டி
அந்திப் பெரும் பொழுதில்
சிந்தியெனை பெற்றவளே
சின்ன மகன் நானிருக்கேன்
சிறிதேனும் நினைவிருக்கோ...

முற்றத்து றோசப் பூ
முள்ளென்னை குற்றிவிட
சுற்றத்து ‘டாக்டர்கள்’
சூழ்ந்தென்னை தொல்லையிட
பக்கத்தில் நீயிருந்து பதைபதைத்த
பருவமேனும் நினைவிருக்கோ...

பள்ளி போன இளையமகன்
பகலில் வரக் காணலேன்னு
சுள்ளி வாத்தியாரை
சுழல வைத்த சூறாவளி
உன்னருமை மகனிருக்கேன்
உறவேனும் நினைவிருக்கோ...

அடுக்களைக்குள் நான் நுழைந்து
சடுக்கென்று உடைக்கும்போது
விடுக்கென்று பறிக்கின்ற – உன்
வீரத்தில் நனைந்த எந்தன்
மடத்தனங்கள் நினைவிருக்கோ- மகனின்
மறுவுருவம் நினைவிருக்கோ...

தந்தைக்கு தலை மகனும்
தாய்க்கு கடை மகனும்
கொள்ளி வைக்க வேணுமென்னு
சொல்லி வைத்த வேதியர்கள்
கிள்ளியேனும் என்னுயிரை கருவறையில்
தள்ளி வைக்க முடியலையே...

சும்மா நினைவுக் கெண்டு
சோடியா எடுத்த படம்
சுவத்தோரம் மாட்டி விட்டா
சுழல் காற்றில் போகுமெண்டு
அம்மா நான் நினைக்கலையே- உன்
அடி வயிறு நோகுமெண்டு...

சூது செய்யும் காதலெனை
பாது செய்யப் போகுதெண்டு
சாது சொன்ன சேதிகேட்டு
சரியா நீ பேசலையே -இப்ப
மாலை போட்டு புகைப்படத்தில்
மண மகனாய் பாக்கிறியே!

Friday, February 12, 2010

யாழ்ப்பாணம்

நாகர் வீரத்தின் நரம்புகளும் - மறவர்
நறுமணம் வீசும் தழும்புகளும்
நூங்கு மரத்தின் குழம்புகளும் - முது
நூலோர் முறுக்கிய பிரம்புகளும்
தேங்கிக் கிடக்கும் யாழ்ப்பாணம் - அது
திராவிட இனத்தின் தேன்பானம்.

காதலர் குலாவும் ‘கஜுனா’கடலோரம் - மான்
மாதுகள் நீராடும்கீரி மலையோரம்
ஆழ்வளம் பொழில் நிலாவரையும் - பல
அன்னியர் வியக்கும் அதிசயமும்
மான், மரை கொண்டது யாழ்ப்பாணம் - தமிழ்
மானம் காத்ததும் யாழ்ப்பாணம்.

அண்டி வளர்த்த எம்பூமி - இன்று
மண்டிக் கிடக்குது ஏன்சாமி
சுண்டி விதைக்கும் நெல்மணிகள் - வெடி
கண்டு கிடக்குது பிணபூமி
குண்டடி பட்டதும் யாழ்ப்பாணம் - ஷெல்
எண்டு படுத்ததும் யாழ்ப்பாணம்.

நஞ்சு படர்ந்து போனதனால் - விதி
விஞ்சும் வீரர் மடிந்ததனால்
தென் மன்னவர் செய்சதியதனால் - சிக்கி
சின்னா பின்னமா னதனால்
மதிப்பை இழந்தது யாழ்ப்பாணம் -மறு
பதிப்பை எடுக்குமா யாழ்ப்பாணம்.

Tuesday, February 9, 2010

பாட்டோடு பட்டம்

முந்தநாள் முளைச்ச நெல்லு
மூன்று இலை போடுமென்று
சொல்லி வைத்த வேதியர்கள்
சாத்தி ரங்கள் படித்தவக...

வீட்டோடு பிறந்த பிள்ளை
வீணாகிப் போகு மெண்டு
காதோரம் சொல்லி வைச்ச
கதையை நான் சொல்லிடவா...

எங்கம்மா பிறந்த போது
எதிரி யெண்டு சொன்னவக
அவபிள்ளை நான் பிறக்க
அரி வாளை எடுத்தவக...

ரோட்டோரம் போகும் போது
ரொம்பத் தான் இதழ்ந்தவக
வீட்டோரம் போகும் போது
விரட்டி யெனை அடிச்சவக...

ஏட்டோடு போன மகன்
பாட்டோடு வருனா ணெண்டு
வீட்டோரம் சொல்லி வைக்க
விச ரெண்டு சொன்னவக...

பாட்டோடு பட்டம் வர
பாரதியா ரெண்டு சொல்லி
வீட்டோடு வர வழைத்து
விருந் துண்ணக் கொடுக்குதுக.

தலை வாழை இலைபோட்டு
தலை மாமன் மகள்மாரும்
தவறாது கொடுக்க வெண்டு
தரமாக சமைக் குதுக.

Saturday, February 6, 2010

செம் ‘பா’ கொண்டு வெல்வேன்

தாயென்னை பெற்றெடுத்து விட்டாள் - செந்
தமிழ் தன்னை வளவென்று உலகில்
மன மென்னை விடவில்லை தினமும்
சினங் கொண்டு வளவென்று தமிழை...

யாரிங்கு வந்தாலும் செந் தமிழை
பாழ்கெட்டுப் போக விடுவேனா இடைநடுவில்
தீதென்றும் பாதென்றும் பாரேன் - அது
மாதென்ற போதினிலும் நான்கெட்டுப் போகேன்

உறவென்று வந்தாலும் பாரேன் -அது
விறகென்ற போதிலும் நான்கரிந்து போகேன்
திறவென்று வந்தாலும், மயிரென்று உயிரை
பறவென்று விடுவேன் மகிழ்வோடு அதனை

‘சா’ ஒன்று வந்தாலும் என்பின்னே
‘சோ’வென்று பெய்வேன் ‘பா’கொண்டு முன்னே
போவென்று சொன்னாலும் தமிழ்க்கண்ணை – நெஞ்சில்
வேல்கொண்டு காப்பேன் தோளோடு வுன்னை.

Tuesday, February 2, 2010

மனிதம் எங்கே இருக்கிறது...?

எதிரியும் பகைவனும்,
உயர்ந்தவனும் தாழ்ந்தவனும்
அணைத்துக் கொண்டனர்
கள்ளுக்கடையில்...

அமெரிக்காவும் ரஷ்யாவும்,
இஸ்ரேலும் பலஸ்தீனமும்
கைலாகு கொடுத்தன
மதுக்கடையில்...

இலையான்களும் காக்காக்களும்
சங்கமித்தன
சாக்கடையில்...

எலியும் பூனையும்
உறவாடின
அடுக்களையில்...

கிறிஸ்தவனும் இஸ்லாமியனும்
கை கோர்ப்பார்களா
ஜெருசலோமில்..!

இந்துவும் இஸ்லாமியனும்
அனைத்துக்கொள்வார்களா
மக்காவில்..!